அதிக ஒலி எழுப்புவதா? தனியார் பஸ் ஓட்டுநரிடம் நடிகர் சேரன் வாக்குவாதம்


அதிக ஒலி எழுப்புவதா? தனியார் பஸ் ஓட்டுநரிடம் நடிகர் சேரன் வாக்குவாதம்
x

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் சேரன் உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் இருப்பவர் சேரன். இவரது திரைப்படங்கள் என்பது கிராமங்கள் மற்றும் குடும்ப வாழ்வியலை சார்ந்து இருக்கும். ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிசம், முரண், யுத்தம் செய் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்நிலையில் கடலூர் - புதுச்சேரி இடையே 150-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. மூன்று நிமிட இடைவெளியில் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுவதால், இந்தப் பஸ் ஓட்டுநர்கள் ஏர் ஹாரன் பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பிக் கொண்டு அதிவேகமாக மற்ற வாகனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாகவே தினசரி பஸ்களை இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸுக்குமுன்னால் நடிகரும் இயக்குநருமான சேரனின் கார் சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் தனியார் ஓட்டுநர் அதிக அளவு சத்தத்துடன் ஒலி எழுப்பிக்கொண்டே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சேரன், நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக ஒலி எழுப்பிய பஸ் ஓட்டுநரிடம் சென்று, கொஞ்சம் பொறுமையாக வந்தால்தான் என்ன? அனைவரும் இந்த சாலையில் தான் செல்ல வேண்டும். ஏன் அதிக ஒலி எழுப்புகிறீர்கள்?' என கேள்வி எழுப்பினார். சாலையில் ஒதுங்குவதற்கு வழி இல்லாத நிலையில், இப்படி ஒலி எழுப்பக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பதிலுக்கு அந்த ஓட்டுநரும் வாக்குவாதம் செய்தார். வெறுத்துப் போன சேரன், ஒதுங்குவதற்கும், வழி விடுவதற்கும் இடமில்லாத இடத்தில் தொடர்ந்து இவ்வாறு சக வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பஸ்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நடிகர் சேரன் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

இந்த சாலையில் எப்போதும் தனியார் பஸ்கள் வேகமாக செல்வதோடு, அதிக முறை ஹாரன் அடித்து செல்வதும் தொடர்ந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


Next Story