பாலியல் சீண்டல்கள் எல்லா துறைகளிலும் நடக்கிறது.. சினிமா மீது மட்டும் ஏன் பழி போடுறீங்க? - நடிகை குஷ்பு


பாலியல் சீண்டல்கள் எல்லா துறைகளிலும் நடக்கிறது.. சினிமா மீது மட்டும் ஏன் பழி போடுறீங்க?  - நடிகை குஷ்பு
x

பாலியல் புகார் தொடர்பாக நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.

சென்னை,

பாலியல் புகார்களை விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்தவர்கள் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "விசாகா சுமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 22.4.2019 அன்று SIAA-GSICC கமிட்டி சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டது. இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தி.நகர். நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று (04.09.2024) காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது" தெரிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, "பொதுக்கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் தீர்மானங்கள் வெளியிடப்படும். எல்லா துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது, ஏன் சினிமாவை மட்டும் சொல்கிறார்கள். எல்லா துறைகளிலும் கமிட்டி தேவைப்படுகிறது என்று தான் சொல்லுவேன். நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. நான் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லை" என்று அவர் கூறினார்.




Next Story