கோட் திரைப்படம்: மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் - ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை


கோட் திரைப்படம்: மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும்  - ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை
x

கோட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில் வெளி வரவிருக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்" (GOAT) திரைப்படம், நாளை மறுநாள் (செப்டம்பர் 5ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் செப்., 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முதல் நாள் முதல் காட்சிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'கோட் 'படத்தில் விஜயுடன் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த சூழலில் கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாட காத்திருக்கிறார்கள். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு பின் சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல் தலைவராக மாற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோட் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கி உள்ளார். இதன்படி அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் கோட் திரைப்படம் திரைக்கு வரும்போது மக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என்றும் விஜய் அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வாய்மொழியாக இந்த அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story