வெள்ளத்தில் மிதக்கும் சென்னை... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அறந்தாங்கி நிஷா...!


வெள்ளத்தில் மிதக்கும் சென்னை... பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அறந்தாங்கி நிஷா...!
x

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை நடிகை அறந்தாங்கி நிஷா வழங்கினார்.

சென்னை,

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகை அறந்தாங்கி நிஷா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர் மக்களுக்கு உதவி செய்வதற்காக திருச்சியில் இருந்து நிவாரண பொருட்களுடன் சென்னை வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் 'நேற்றிலிருந்து வண்டிக்கு முயற்சி செய்தோம். சென்னை என்று சொன்னதும் யாரும் வரவில்லை. தாம்பரத்தில் 1000 பேருக்கு உணவு சமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் வாகனங்கள் கிடைக்காததால் அவர்களுக்கு சரியான நேரத்தில் நிவாரண பொருட்களை கொண்டு சேர்க்க முடியவில்லை. எங்களின் காரில் முடிந்த அளவு பொருட்களை வைத்து உதவிகளை செய்து வருகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், 'மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பாலாஜி நகர், வேளச்சேரி பகுதிகளுக்கு உணவே வரவில்லை. இங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் கொஞ்சம் இங்கு வந்து உணவு கொடுத்து உதவி செய்யுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story