'கோட்' படத்தில் விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்வு


கோட் படத்தில் விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்வு
x

‘கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தோற்றம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தில் யாரெல்லாம் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு நேரத்திலேயே மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு காட்சியில் பயன்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்த தகவல் வெளியானது.

படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படக்குழு ஹைதரபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது. அந்நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு, யுவன், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விஜயகாந்த் தோற்றம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்தார்.

'ஏ.ஐ.தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த்தை உருவாக்கிய வி.எப்.எக்ஸ் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படவுள்ளவரின் நிறைய டேட்டாக்களை இன்புட் செய்ய வேண்டும். நடிகர் என்.டி.ஆரை திரும்பவும் காட்சிப்படுத்த வேண்டுமென்றால் அவரின் முகத் தோற்றம் தொடர்பான அனைத்து டேட்டாக்களையும் இன்புட் செய்த பிறகு எந்த வயதில் வேண்டும் என்றாலும் ஏ.ஐ. உருவாக்கித் தரும். 'கேப்டன் பிரபாகரன்' பட விஜயகாந்தின் டேட்டாக்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியதாகவும் விஜய்க்கு டி ஏஜிங் செய்யும்போது விஜய்யின் பழைய புகைப்படங்களை டேட்டாவாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இளமையாக விஜய்யை காண்பிக்க வேறு ஒரு பையனை நடிக்க வைத்தோம், அப்படிதான் டி.ஏஜிங் விஜய் லுக் வடிவமைத்தோம் என்றார். டெக்னாலஜி நிறைந்த உலகத்தில் நாம் இருப்பதால் எல்லாமே சாத்தியம்தான்' என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

'கோட்' திரைப்படத்தில் விஜய் புலனாய்வுத் துறை ஏஜெண்டாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story