பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது - வைரமுத்து வாழ்த்து


பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது - வைரமுத்து வாழ்த்து
x

கோப்புப்படம் 

ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.

சென்னை,

இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12-வது இஸ்லாமிய மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குடும்பம், நிறுவனம், அரசு என்ற எந்த அமைப்பும் யாரோ ஒருவரின் தியாகத்தை முன்வைத்தே கட்டமைக்கப்படுகிறது. அந்த தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது. அண்டை வீட்டாருக்கும், ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது. குறிக்கோள் மிக்க இந்தக் கொண்டாட்டத்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். தருவோர், பெறுவோர் இருவரும் வாழ்க. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story