பஸ் டிரைவருடன் வாக்குவாதம்: சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்


பஸ் டிரைவருடன் வாக்குவாதம்: சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
x

கடலூரில் இரு தினங்களுக்கு முன் தனியார் பஸ் டிரைவருடன் இயக்குனர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பெரியகங்கணா குப்பத்தின் வழியாக இயக்குநர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் தனியார் பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதோடு, தொடர்ந்து ஹாரன் அடித்தபடி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சேரன் தனது காரை சாலையில் நிறுத்தி கீழே இறங்கினார். பின்னால் வந்த தனியார் பஸ்சும் சாலையில் நின்றது. இயக்குநர் சேரன் தொடர்ந்து ஹாரன் அடிப்பதாக கூறி தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சேரனை சமாதானம் செய்து அனுப்பி வைத்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குனர் சேரன் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளுடன் இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடலூர் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story