குஜராத்தில் 4-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு


குஜராத்தில் 4-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு
x

ஆகஸ்ட் மாத பருவமழை செப்டம்பர் மாதத்திலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் வதோதராவில் செப்டம்பர் 2 முதல் 4 வரை (திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை) மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஆக.23-ம் தேதி பெய்த கனமழை காரணமாக அஜ்வா அணையில் இருந்து விஸ்வாமித்ரி நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், நகரின் பெரும்பாலான இடங்களில ஆறு முதல் எட்டு அடி வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று வதோதராவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருகிலுள்ள பருச் மற்றும் நர்மதா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய குஜராத்தை ஒட்டிய சவுராஷ்டிராவில் அகமதாபாத் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.4ம் தேதி ஆனந்த் மற்றும் பருச் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாத பருவமழை செப்டம்பர் மாதத்திலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 12 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறது. சமீபத்திய பருவ மழையில் சிலநாட்களுக்குள்ளேயே குஜராத் அதன் ஆண்டு சராசரியை விட 105 சதவீதம் அதிகமாக பெற்றுவிட்டது.


Next Story