கனமழை எதிரொலி: கேரளாவில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


கனமழை எதிரொலி: கேரளாவில் 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 31 July 2024 3:02 PM GMT (Updated: 31 July 2024 3:18 PM GMT)

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், கனமழை காரணமாக நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1,300-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்றும் கேரளாவில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்நிலையில் நாளை கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திருச்சூர், வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குடியிருப்பு பள்ளிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும், முன்னதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story