சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத் !!


சர்ச்சை நாயகி கங்கனா ரனாவத் !!
x
தினத்தந்தி 18 Jun 2023 2:45 AM GMT (Updated: 18 Jun 2023 2:50 AM GMT)

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், கடந்த சில வருடங்களாக நிறைய சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்துமே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அது அவருக்கு மிகப் பெரிய சிக்கலையும் தருவதை தவிர்க்க முடியவில்லை.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் டெல்லியில் பெரிய போராட்டம் நடத்தியபோது, அவர்களை 'பயங்கரவாதிகள்' என்று கூறினார், கங்கனா ரனாவத். இதனால் அவரது டுவிட்டர் கணக்கு 2021-ம் ஆண்டு முடக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் அது மீண்டும் விடுவிக்கப்பட்டது. ஆனாலும் கங்கனா ரனாவத் தன்னுடைய சர்ச்சை கருத்துக்களை நிறுத்திக்கொள்ளவில்லை.

சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழி என்றார். இந்தியா என்பது அடிமைகளின் பெயர். அதனை 'பாரதம்' என்று மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். 1947-ம் ஆண்டு இந்தியா அடைந்தது சுதந்திரம் அல்ல.. 2014-ல் இந்தியா அடைந்ததுதான் உண்மையான சுதந்திரம் என்று கூறினார். இப்படி அரசியல் ரீதியாகவும், இந்தியாவில் நடக்கும் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களுக்கு எதிராக இருப்பதால் சர்ச்சையாக மாறிப்போனது.

தான் இருக்கும் சினிமாத் துறையினரையும் அவர் விட்டு வைக்கவில்லை. பலரையும் தாக்கிப் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும், மிக முக்கியமான நடிகையாக கங்கனா ரனாவத் இருக்கிறார். 'கான்' நடிகர்களுக்கானது, இந்தி சினிமா என்று கூறினார். தனக்கு எதிராக கருத்து சொல்லும் எந்த சினிமா பிரபலங்களையும், அவர் விட்டு வைத்தது கிடையாது. அடுத்த நொடியே அவரைப் பற்றி ஏதாவது ஒரு கருத்தைச் சொல்வார். அது சர்ச்சையில் முடிந்து விடும்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு விஷயத்தை பதிவிட்டிருந்தார், கங்கனா ரனாவத்.

அதில், "விரைவில் பாலிவுட்டில் வெளியாக உள்ள இன்னொரு ராமாயணம் படம் பற்றி அறிந்தேன். அந்தப் படத்தில் ஒரு ஒல்லியான வெள்ளை எலி நடிகர், ராமராக நடிக்கிறாராம். திரைத்துறையில் உள்ள ஒவ்வொருவரை பற்றியும் கேவலமாக பேசியே பிரபலமடைந்தவர், போதைப் பழக்கத்திற்கும் பெண்கள் பின்னால் சுற்றியதற்கும் பெயர் பெற்றவர், யாரும் பார்க்காத சில பாகங்களாக உருவாகும் படத்தில் சிவனாக காட்டிக் கொள்ள முயற்சித்த அந்த நடிகர்தான் இப்போது ராமராக நடிக்கிறார்.

ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் விளக்கத்தின்படி, தனது நிறம், நடத்தை மற்றும் முகத் தோற்றத்தில் ராமனைப் போலவே இருக்கும் ஒரு தென்னிந்திய சூப்பர் ஸ்டாரும், சினிமாவில் தன்னைத் தானே வளர்த்துக் கொண்டவர் என்று அறியப்பட்டவருமான ஒரு நடிகருக்கு ராவணன் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது என்ன மாதிரியான கலியுகம்? போதைக்கு அடிமையான, வெளிறிய தோற்றம் கொண்ட ஒருவர் ராமராக நடிக்கக்கூடாது. ஜெய் ஸ்ரீராம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தான் பதிவிட்ட செய்தியில் குறிப்பிட்ட நடிகரின் பெயர்களை கங்கனா ரனாவத் தவிர்த்திருந்தாலும், அந்த நடிகர்கள் யார் என்பதை சினிமா வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிவர். பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் நடிப்பில், நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தைத் தழுவி ஒரு படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக ஆலியாபட், ராவணனாக கே.ஜி.எப். படத்தின் நாயகன் யஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கணவன் - மனைவியான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அவை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சண்டையாக வெளிப்படுவதும் உண்டு. அப்படி ஒரு சமூக வலைத்தள சண்டையைத் தான் கங்கனா ரனாவத் தொடங்கி வைத்திருப்பதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கங்கனா ரானாவத் தன்னுடைய சர்ச்சைப் பதிவை முடிப்பதற்கு முன்பாக, இன்னொரு விஷயத்தையும் அதில் பதிவு செய்திருக்கிறார். எமோஜியில் டேஞ்சரைக் குறிக்கும் குறியீட்டை பதிவிட்டு, அதனுடன் "நீ என்னை ஒரு முறை அடித்தால், நான் உன்னை சாகும் வரை அடிப்பேன், என்னுடன் பிரச்சினை வேண்டாம், விலகி இரு" என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இதற்கு ரன்பீர் கபூர் அல்லது ஆலியாபட் எதிர்வினையாற்றுகையில் இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும். அப்படி இல்லாவிட்டால், அப்படியே அமிழ்ந்து போகும். எது எப்படியோ பாலிவுட்டில் நடக்கும் பல சர்ச்சைகளுக்கு, காரணமாக கடந்த சில வருடங்களாக கங்கனா ரனாவத் இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.


Next Story