பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்


தினத்தந்தி 30 July 2024 7:55 AM GMT (Updated: 30 July 2024 8:32 AM GMT)

துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 5-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவுக்கான வெண்கல பதக்க போட்டியில் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே - வோன்ஹோ லீ ஜோடியை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய இணை 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

இது நடப்பு தொடரில் இந்தியாவின் 2-வது பதக்கமாக பதிவாகியுள்ளது. மேலும் இந்தியா வென்ற இந்த 2 பதக்கங்களிலும் மனு பாக்கர் இடம்பெற்றுள்ளது சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த போட்டியின் 3-வது நாளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.

இதில் முதல் 2 இடங்களை பிடித்த துருக்கி மற்றும் செர்பிய அணிகள் முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களுக்கான இறுதி போட்டியில் விளையாடுகின்றன.


Next Story