டி.என்.பி.எல்.: சஞ்சய் யாதவ் அதிரடி.... திருச்சி அணி 198 ரன்கள் குவிப்பு


டி.என்.பி.எல்.: சஞ்சய் யாதவ் அதிரடி.... திருச்சி அணி 198 ரன்கள் குவிப்பு
x

image courtesy: twitter/@TNPremierLeague

தினத்தந்தி 14 July 2024 11:25 AM GMT (Updated: 14 July 2024 12:52 PM GMT)

திருச்சி அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 68 ரன்கள் குவித்தார்.

கோவை,

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அர்ஜூன் மூர்த்தி - வாசீம் அகமது ஆகியோர் களமிறங்கினர். இதில் மூர்த்தி 11 ரன்களிலும், வாசீம் அகமது 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷியாம் சுந்தர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 19 ரன்களில் அவுட்டானார்.

இதன்பின் ஜோடி சேர்ந்த ஜாபர் ஜமால் - சஞ்சய் யாதவ் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. ஜமால் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகும் அதிரடியில் வெளுத்து வாங்கிய சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்டத்தில் ராஜ்குமார் 18 ரன்கள் (5 பந்துகள்) மற்றும் சரவண குமார் 17 ரன்கள் (6 பந்துகள்) அதிரடியாக விளையாட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருச்சி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 68 ரன்கள் குவித்தார். சேலம் தரப்பில் அதிகபட்சமாக பொய்யாமொழி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேலம் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story