ஐ.பி.எல். 2025: ருதுராஜ், ஜடேஜாவுக்கு சம ஊதியம்...? - வெளியான தகவல்


ஐ.பி.எல். 2025: ருதுராஜ், ஜடேஜாவுக்கு சம ஊதியம்...? - வெளியான தகவல்
x

image courtesy: PTI

ஐ.பி.எல். 2025க்கான மெகா ஏலம் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மெகா ஏலம் நெருங்கும் நிலையில், சிஎஸ்கே அணி தரப்பில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

அதன்படி, சி.எஸ்.கே. நிர்வாகம், ருதுராஜ், பதிரானா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனியை தக்கவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், முதல் வீராக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடிக்கும், 2-வதாக இலங்கை வேகப்பந்துவீச்சாளர் பதிரானா ரூ.14 கோடிக்கும், 3-வதாக ஷிவம் துபே ரூ.11 கோடிக்கும், 4வது வீரராக ரவீந்திரா ஜடேஜா ரூ.18 கோடிக்கும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி பார்த்தால், ருதுராஜ், ஜடேஜாவுக்கு சம ஊதியம் வழங்க சி.எஸ்.கே. நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், 5வது வீராக தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்தாலும் தோனி இதுவரை சிஎஸ்கே நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தாததால், இறுதி முடிவை எடுக்க முடியாமல் நிர்வாகிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது.


Next Story