சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

image courtesy:twitter/@imlt20official
இன்று நடைபெற உள்ள 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
ராய்பூர்,
முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் ராய்பூரில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யுவராஜ் சிங்கின் அதிரடி அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் யுவராஜ் 59 ரன்களும், சச்சின் 42 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சேவியர் டோஹர்ட்டி மற்றும் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.1 ஓவர்களில் 126 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பென் கட்டிங் 39 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஷபாஸ் நதீம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் இன்று நடைபெற உள்ள 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.