இந்தியாவை தவிர மற்ற அணிகளுக்கு ஐ.சி.சி. அநியாயம் செய்துள்ளது - மைக்கேல் வாகன் விமர்சனம்


இந்தியாவை தவிர மற்ற அணிகளுக்கு ஐ.சி.சி. அநியாயம் செய்துள்ளது - மைக்கேல் வாகன் விமர்சனம்
x
தினத்தந்தி 27 Jun 2024 6:44 AM GMT (Updated: 27 Jun 2024 6:46 AM GMT)

ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அரையிறுதி ஆட்டம் கயானா நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.

டிரினிடாட்,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றுள்ளது. மற்றொரு அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் கயானா நகரில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

அதன்படி இன்று காலை டிரினிடாட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஆனால் இந்த போட்டி கயானா நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். அத்துடன் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது அரையிறுதி டிரினிடாட் நகரில் நடைபெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதை தட்டிக் கேட்க வேண்டிய ஐசிசி'யே மொத்த உலகக் கோப்பையையும் இந்தியாவுக்கு சாதகமாக நடத்தி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடினால் அதை பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதனால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அப்போட்டி கயானாவில் தான் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்திருந்தது.

இது குறித்து மைக்கேல் வாகன், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. "இந்த அரையிறுதி போட்டி கண்டிப்பாக கயானாவில் நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த மொத்த தொடருமே இந்தியாவை நோக்கி நடத்தப்படுவதால் அது மற்ற அணிகளுக்கு அநியாயத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story