அவர்தான் எனது ரோல் மாடல் - குல்தீப் யாதவ் உருக்கம்


அவர்தான் எனது ரோல் மாடல் - குல்தீப் யாதவ் உருக்கம்
x

image courtesy: AFP

தினத்தந்தி 23 Aug 2024 9:00 AM GMT (Updated: 23 Aug 2024 10:21 AM GMT)

குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் தனிப்பட்ட முறையில் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே மெல்போர்ன் மைதானத்திற்கு சென்ற அவர் வெளியே உள்ள ஷேன் வார்னே சிலையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு நினைவை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் தமது ரோல் மாடலான வார்னேவை தம்முடைய குடும்பத்தில் ஒருவரைப்போல் கருதுவதால் அவரை நினைக்கும் போது தமக்கு சோகம் ஏற்படும் என்று குல்தீப் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2024/25 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விளையாடி இந்தியாவுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் குல்தீப் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஷேன் வார்னே எனது ரோல் மாடல். அவருடன் எனக்கு வலுவான இணைப்பு இருந்தது. வார்னேவை பற்றி சிந்திக்கும்போது இப்போதும் எனக்கு உணர்ச்சி வசம் ஏற்படும். குறிப்பாக அவரை நினைத்தால் எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். ஆஸ்திரேலிய வாரியத்தின் தலைமைச் செயலகம் மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் இருப்பது சிறப்பாக இருக்கிறது.

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்காக நான் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்த வருடம் நாம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே மகத்தான போட்டியை எதிர்பார்க்கிறோம். இந்திய ரசிகர்கள் எங்களுடைய அணிக்கு உலகம் முழுவதிலும் எங்கு சென்றாலும் ஆதரவு கொடுப்பார்கள். அதே போல பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் குறிப்பாக பாக்சிங் டே போட்டியில் அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.


Next Story