ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் அதிரடி... யு.ஏ.இ. அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா


ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் அதிரடி... யு.ஏ.இ. அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
x

image courtesy: twitter/@BCCIWomen

தினத்தந்தி 21 July 2024 10:13 AM GMT (Updated: 21 July 2024 10:15 AM GMT)

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்கள் குவித்தார்.

தம்புல்லா,

9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் இந்தியா - யு.ஏ.இ. அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ. பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனையான மந்தனா 13 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹெமலதா 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ஷபாலி வர்மாவுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.

அதிரடியாக ஷபாலி வர்மா 18 பந்துகளில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிச்சா கோஷ் களமிறங்கிய ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். இதனிடையே ஹர்மன்பிரீத் 41 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர் 47 பந்துகளில் 66 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளையும் பவுண்டரிக்கு பறக்க விட்ட ரிச்சா கோஷ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக ஹர்மன்பிரீத் கவுர் 66 ரன்களும், ரிச்சா கோஷ் 64 ரன்களும் குவித்தனர். யு.ஏ.இ. தரப்பில் அதிகபட்சமாக கவிஷா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி யு.ஏ.இ. பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story