இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் (71) காலமானார்


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் (71) காலமானார்
x
தினத்தந்தி 1 Aug 2024 3:37 AM GMT (Updated: 1 Aug 2024 5:37 AM GMT)

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் நேற்று காலமானார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் (71) நேற்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் நாடு திரும்பியிருந்தார். அவருடைய சிகிச்சை செலவுகளுக்காக பி.சி.சி.ஐ. ரூ.1 கோடி நிதியுதவி செய்திருந்தது.

1985 முதல் 1987 வரை கெய்க்வாட் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 205 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார், 1982 - 1983 ஆம் ஆண்டுகளில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 34 சதங்கள், 47 அரைசதங்கள் உட்பட மொத்தமாக 12,136 ரன்களை குவித்துள்ளார்.

அன்ஷுமான் கெய்க்வாட், இரண்டு முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது பயிற்சியின் கீழ், இந்திய அணி 2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கெய்க்வாட் மறைவுக்கு பிரதமர் மோடி, பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா மற்றும் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story