அதிரடியாக விளையாடிய அபிஷேக் - கெய்க்வாட் ...வம்பிழுத்த பாக்.முன்னாள் வீரர்


அதிரடியாக விளையாடிய அபிஷேக் - கெய்க்வாட்  ...வம்பிழுத்த பாக்.முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 8 July 2024 3:17 PM GMT (Updated: 8 July 2024 3:36 PM GMT)

அபிஷேக் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு ஐபிஎல் தொடரைபோல பிளாட்டான பிட்ச் கிடைத்ததாலேயே அதிரடியாக விளையாடியதாக ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

ஹராரே,

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 100 ரன், ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன், ரிங்கு சிங் 48 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அவேஷ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட், ரவி பிஷ்னோய் 2 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு ஐபிஎல் தொடரைபோல பிளாட்டான பிட்ச் கிடைத்ததாலேயே அதிரடியாக விளையாடியதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார். - எனவே புதிதாக ஒன்றும் சாதித்து விடவில்லை என்று தெரிவிக்கும் அவர் இந்திய பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் போன்ற பிளாட்டான பிட்ச்களில் மட்டுமே அடித்து நொறுக்குவார்கள் என்று வம்பிழுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "அபிஷேக் மற்றும் கெய்க்வாட் நன்றாக பேட்டிங் செய்தார்கள். இதை பார்க்கும்போது ஐபிஎல் பிட்ச்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதுபோல் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story