சைகை காட்டிய டிராட்... மைதானத்தில் சுருண்டு விழுந்த குல்பாடின்... கலாய்த்த அஸ்வின்


சைகை காட்டிய டிராட்... மைதானத்தில் சுருண்டு விழுந்த குல்பாடின்... கலாய்த்த அஸ்வின்
x
தினத்தந்தி 25 Jun 2024 9:19 AM GMT (Updated: 25 Jun 2024 9:22 AM GMT)

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் போட்டியின் இடையே அடிக்கடி மழை குறுக்கிட்டது.

கிங்ஸ்டவுன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இருப்பினும் மனம் தளராத அந்த அணி, முழு மூச்சுடன் போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.

அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

அதைப் பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின், " இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் கலாய்த்தார்.


Next Story