சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா


தினத்தந்தி 12 Oct 2024 5:24 PM GMT (Updated: 12 Oct 2024 8:47 PM GMT)

வங்காளதேச அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி, வங்காளதேச அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தது. இதில் முக்கியமாக சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) விளாசினார். பின்னர் மகமுதுல்லாவின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக ஆடி ரன் மழை பொழிந்த சஞ்சு சாம்சன், 47 பந்துகளில் 111 ரன்கள் (11 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) குவித்தார்.

அடுத்து வந்த ரியான் பராக், 34 ரன்களில் கேட்ச் ஆனார். அரைசதம் நோக்கி முன்னேறிய ஹர்திக் பாண்ட்யா, 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. வங்காளதேச அணியில் தன்சிம் ஹசன் சாகிப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20 ஓவர் சர்வதேச போட்டியில் இந்தியாவின் அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு இந்தூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் ஷகிப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிடாய் ஆட்டமிழக்காமல் 63 ரன்னும் (42 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று இருந்தது.


Next Story