ஒலிம்பிக்: இந்தியாவுக்காக சரித்திர சாதனை படைத்த சாய்னா நேவால்


ஒலிம்பிக்: இந்தியாவுக்காக சரித்திர சாதனை படைத்த சாய்னா நேவால்
x

image courtesy: PTI

தினத்தந்தி 22 July 2024 12:39 PM GMT (Updated: 22 July 2024 12:39 PM GMT)

33-வது ஒலிம்பிக் தொடர் இன்னும் 3 தினங்களில் தொடங்க உள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதனையொட்டி ஒலிம்பிக் தொடரில் சாய்னா நேவால் படைத்த சரித்திர சாதனை குறித்து காண்போம்...!

30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2012-ம் ஆண்டில் ஜூலை, ஆகஸ்டில் நடைபெற்றது. ஏற்கனவே 1908, 1948-ம் ஆண்டுகளிலும் இங்கு ஒலிம்பிக் நடந்துள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்திய முதல் நகரம் என்ற பெருமையை பெற்ற லண்டன், இந்த ஒலிம்பிக் போட்டிக்காக ரூ,80 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட்டது.

சவுதிஅரேபியா, கத்தார், புருனே ஆகிய நாடுகள் முதல்முறையாக வீராங்கனைகளை ஒலிம்பிக்குக்கு அனுப்பியது. பெண்களுக்கான குத்துச்சண்டை அறிமுகம் ஆனது. ஆண்கள் மட்டுமே என்பது இல்லாமல் ஒவ்வொரு விளையாட்டு பிரிவிலும் பெண்களும் இடம் பெற்ற முழுமையான ஒலிம்பிக்காக இது அமைந்தது. 204 நாடுகளைச் சேர்ந்த 10,568 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த ஒலிம்பிக் இந்தியாவுக்கு மகிழ்ச்சியும், தித்திப்பும் நிறைந்ததாக அமைந்தது. இந்த தொடரில் இந்தியா 6 பதக்கங்கள் வென்று அசத்தியது.

சரித்திரம் படைத்த சாய்னா நேவால்: பேட்மிண்டனில் சாய்னா நேவால் வெண்கலம் கைப்பற்றி தேசத்துக்கு பெருமை சேர்த்தனர். இதில் சாய்னாவுக்கு அதிர்ஷ்டம் தான் கைகொடுத்தது என்று சொல்ல வேண்டும். வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் அவரை எதிர்த்து ஆடிய சீன வீராங்கனை வாங் ஸின் முதல் செட்டை வென்று 2-வது செட்டில் 1-0 என்று முன்னிலை வகித்தபோது காயத்தால் விலக நேரிட்டது. இதனால் பேட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனைக்கு சாய்னா சொந்தக்காரர் ஆனார்.


Next Story