சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 4 Jun 2024 10:22 AM GMT (Updated: 4 Jun 2024 11:04 AM GMT)

ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்த சூழலில் ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. மேலும் கூட்டணி இல்லாமல் தனித்து 131 தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள்.

தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்', இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story