நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு


தினத்தந்தி 1 Jun 2024 1:31 AM GMT (Updated: 1 Jun 2024 12:30 PM GMT)

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லக்னோ,


Live Updates

  • 1 Jun 2024 2:29 AM GMT

    வாக்களித்த யோகி ஆதித்யநாத்

    உத்தரபிரதேச முதல்-மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதி கோகர்நாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ரவி கிருஷ்ணனும், சமாஜ்வாதி வேட்பாளராக ஜாவித் அஷ்ரபும் களமிறங்கியுள்ளனர்.

  • 1 Jun 2024 2:16 AM GMT

    வாக்களித்த ஜே.பி.நட்டா

    இமாச்சலபிரதேசம் பிலஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாக்களித்தார். ஜே.பி.நட்டாவுடன் அவரது மனைவியும் வாக்களித்தார்.



  • 1 Jun 2024 1:37 AM GMT

    இறுதிக்கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

    நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தலும், 58 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    இந்நிலையில், 6 கட்ட தேர்தலில் ஒட்டுமொத்தமாக 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

    உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (9 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடக்கி நடைபெற்று வருகிறது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. இறுதிக்கட்ட தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியும் அடக்கம்.

    வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்த உடன் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

    இதையடுத்து, 7 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  


Next Story