மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும்: ஜெகன்மோகன் ரெட்டி


மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான 4 சதவீதம் இடஒதுக்கீடு தொடரும்: ஜெகன்மோகன் ரெட்டி
x
தினத்தந்தி 11 May 2024 7:19 AM GMT (Updated: 11 May 2024 10:06 AM GMT)

ஆந்திராவில் 175 தொகுதிகட்ளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (13ம் தேதி) நடைபெற உள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெருகிறது. இதையடுத்து ஆந்திராவில் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலின் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

"சந்திரபாபு நாயுடு இரட்டை வேடம் போடுகிறார். ஒருபுறம் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக கூறிவரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கொண்டு, நான் சிறுபான்மையினரின் நண்பன் என்றும் கூறிக்கொள்கிறார்.

ஆனால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவில் 4 சதவீத முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடரும். 4 நாட்களில் ஆந்திராவில் குருஷேத்திர போர் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் எம்.பி.க்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்யும் தேர்தல் அல்ல. எதிர்காலத்தை நினைவில் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை யார் சரியாக செயல்படுத்துவார்களோ அவர்களுக்கு முடிசூடும் தேர்தல். சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்களித்தால், நல திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும்.

சந்திரபாபு நாயுடு 3 முறை, 14 ஆண்டுகள் முதல்வராக இருந்து என்ன பயன்? ஏழைகளுக்கு என எந்தவொரு திட்டத்தையும் அவர் வகுக்கவில்லை. நான் கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவில் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி வளர்ச்சிக்கான நல திட்டங்களை வீடு, வீடாக கொண்டு போய் சேர்த்துள்ளேன்." இவ்வாறுஅவர் கூறினார்.


Next Story