5-ம் தேதி தேர்தல் அறிக்கை.. அடுத்த நாளே 2 மெகா பொதுக்கூட்டம்: காங்கிரஸ் அதிரடி


5-ம் தேதி தேர்தல் அறிக்கை.. அடுத்த நாளே 2 மெகா பொதுக்கூட்டம்: காங்கிரஸ் அதிரடி
x

ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்ற உள்ளனர்.

புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரும் 5-ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதிலும் இருந்து மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 6-ம் தேதி ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்தில் மெகா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உரையாற்ற உள்ளனர்.

ஐதராபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ராகுல் உரையாற்ற உள்ளார். நாட்டிற்கு நலன் மற்றும் வளர்ச்சியில் நாங்கள் எப்போதும் கவனம் செலுத்துகிறோம். இந்த தேர்தலிலும் அதுவே மக்கள் முன் தேர்தல் அறிக்கையாக வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story