75 வயதில் ஓய்வு பெற பிரதமர் மோடி தயாரா? ரேவந்த் ரெட்டி கேள்வி


75 வயதில் ஓய்வு பெற பிரதமர் மோடி தயாரா? ரேவந்த் ரெட்டி கேள்வி
x
தினத்தந்தி 11 May 2024 8:54 AM GMT (Updated: 11 May 2024 12:31 PM GMT)

பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெருகிறது. இதையடுத்து கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க.வில் தலைவர்கள் 75 வயதில் அரசியலில் இருந்து விலகும் முடிவை நிர்ணயித்த பிரதமர் மோடிக்கும் அது பொருந்துமா என தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ரேவந்த் ரெட்டி நேற்று ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு பா.ஜ.க.வில் ஓய்வு பெறுவதற்கான வயது 75 என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அப்படித்தான் அவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக பலவந்தமாக முடிவுகளை எடுத்துள்ளார். இப்போது நரேந்திர மோடி 74 வயதை கடக்க போகிறார். இன்னும் ஓராண்டு உள்ளது. நரேந்திர மோடியிடம் இதே கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். 75 வயதில் ஓய்வு பெற நீங்கள் தயாரா?

ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1947 முதல் 2014 வரை 14 பிரதமர்கள் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளாக ரூ.55 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடி, ரூ.113 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். அவர் இந்த நாட்டை அழித்து விட்டார். நாடு ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறது. எனவே இதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.

பிரதமர் மோடி எந்த ஆவணங்களை சமர்ப்பித்தாலும், நாங்கள் அந்த ஆவணங்களை நம்ப போவதில்லை. ஏனெனில் அவர் தேர்தலில் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு நேர்மை அல்லது நம்பகத்தன்மை இல்லை" என்றார்.


Next Story