இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் பதிவு


இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் பதிவு
x

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

சென்னை,

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக இந்திய தேர்தல் கமிஷன் நடத்த உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில், எந்தப் பகுதியிலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறப்படுவதை படம் பிடித்து தேர்தல் கமிஷனுக்கு மக்கள் வழங்குவதற்காக சி-விஜில் என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறலை அந்த செயலி வழியாக புகைப்படமோ அல்லது வீடியோ படமோ எடுத்து தேர்தல் கமிஷனுக்கு புகாராக (பெயர், ஊர் கூறாமலேயே) அனுப்பிவிடலாம். அப்படி அனுப்பப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படும்.

அந்தவகையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 3-ந்தேதி வரை பதிவு செய்யப்பட்ட புகார்கள் பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.

இந்தியா முழுவதும் அதிகபட்சமாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 939 புகார்கள் பெறப்பட்டன. அவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 551 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 481 புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டது. 388 புகார்கள் விசாரணையில் உள்ளன.

அதிகபட்சமாக கேரளாவில் 71 ஆயிரத்து 168 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 70 ஆயிரத்து 929 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. லடாக், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் ஒரு புகார்களும் பதிவு செய்யப்படவில்லை. குறைந்தபட்சமாக மேகாலயாவில் 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.


Next Story