அம்மன் வழிபாட்டில் முக்கிய பிரசாதம்.. ஆடி மாதம் கூழ் ஊற்ற காரணம் இதுதான்..!


அம்மன் வழிபாட்டில் முக்கிய பிரசாதம்.. ஆடி மாதம் கூழ் ஊற்ற காரணம் இதுதான்..!
x
தினத்தந்தி 14 July 2024 5:49 AM GMT (Updated: 14 July 2024 9:10 AM GMT)

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து, பின்னர் அதனை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து மகிழ்வார்கள்.

ஆனி முடிந்து ஆடி பிறக்கப் போகிறது. ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆடி மாத வழிபாடுகளில், வேப்பிலை, மஞ்சள், கூழ் பிரசாதம் போன்றவை முக்கியமனவை. குறிப்பாக, கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமான இந்த கூழ், உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் சிறந்த உணவாகும்.

மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெறுகிறது.

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைப்பதாக வேண்டிக்கொண்டு, கூழ் படைத்துவிட்டு பின்னர் அதனை மற்றவர்களுக்கு பிரசாதமாக கொடுத்து மகிழ்வார்கள். இவ்வாறு அம்மனுக்கு கூழ் படையலிட்டு பின்னர் விநியோகிப்பது விசேஷம்.

கூழ் வார்த்தல் தொடர்பான முக்கிய புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை, பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ச்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி, துக்கம் தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் தன்னுடைய உயிரையும் விட முடிவு செய்த ரேணுகாதேவி, தீயை மூட்டி அதில் இறங்கினார். அப்போது இந்திரன் மழை பொழியச் செய்து தீயை அணைத்தான். இருப்பினும் தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். பின்னர் பசியைப் போக்கிக் கொள்ள அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அங்குள்ள மக்கள், அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாகக் கொடுத்தனர். அதைக் கொண்டு கூழ் தயாரித்து சாப்பிட்டார், ரேணுகாதேவி.

அப்போது அவர் முன்பாக தோன்றி சிவபெருமான், "உலக மக்களின் அம்மை நோய் நீங்க, நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும்" என்று வரம் அளித்தார்.

இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையில், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படையல் வைத்து, எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடுவதுடன், அம்மனுக்கு படைத்த கூழை பக்தர்களுக்கு வழங்கினால், அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள் என்பது ஐதீகம்.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள https://x.com/dinathanthi


Next Story