ஆடி கிருத்திகை விழா.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 28 July 2024 8:16 AM GMT (Updated: 28 July 2024 8:22 AM GMT)

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை சரவண பொய்கை குளத்தில் முதல் நாள் தெப்ப திருவிழா நடைபெறும்.

திருத்தணி:

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று தொடங்கியது. இன்று ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

வெளியூர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் மயில்காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடிகள் சுமந்தும். உடலில் வேல், அம்பு அலகு குத்தியும் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். குழந்தைகள் முதல் முதியவர் வரை பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு ஆடிப் பாடி சென்று முருகனை வழிபட்டனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காட்சி அளித்தது.

பக்தர்கள் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே காவடி செலுத்த கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருந்ததை பக்தர்கள் வரவேற்று உள்ளனர். பக்தர்கள் கூட்டத்தால் மலைக்கோவிலுக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் வாகனம் மட்டும் இயக்கப்பட்டது. பக்தர்கள் சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டுகளின் வழியாகவும் சென்று சுவாமியை தரிசித்தனர். வாகன நெரிசலை தவிர்க்க திருத்தணி நகரத்தின் நான்கு எல்லைகளிலும் அனைத்து பஸ்களும், வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக அந்தந்த பகுதிகளில் இருந்து கோயில் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தன.

ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோயில், திருக்குளம், மலைப்பாதை, கோபுரம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வதற்கு கோவில் சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

ஆடி கிருத்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை மாலை சரவண பொய்கை குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறும். மூன்று நாட்கள் தொடர்ந்து தெப்பத்திருவிழா நடைபெற இருக்கின்றது. உற்சவர் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story