நைஜரில் பயங்கரவாத தாக்குதல்; 44 பேர் பலி

நைஜர் நாட்டில் மசூதி மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் பலியாகி உள்ளனர்.
டகார்,
நைஜர் நாட்டின் மேற்கே மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய இரு நாடுகளின் எல்லையையொட்டிய கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா கிராம பகுதியில் மசூதி ஒன்றில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் இறைவணக்கத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, ஆயுதமேந்தய பயங்கரவாதிகள் சிலர் மசூதியை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 44 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர். இதனை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனையடுத்து, 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 3 நாடுகளும் சமீப ஆண்டுகளாக ராணுவ சதியை எதிர்கொண்டு வருகின்றன.
கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ள சூழலில், பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில், பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர்.