ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 8 July 2024 5:45 PM GMT (Updated: 8 July 2024 5:51 PM GMT)

ரஷியா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அதிபர் புதினை சந்தித்தார்.

மாஸ்கோ,

இந்தியா - ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்தியா - ரஷியா இடையேயான இரு நாட்டு உச்சி மாநாடு மாஸ்கோவில் எற்பட்டு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி ரஷியா சென்றுள்ளார்.

ரஷியா தலைநகர் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடியை அதிபர் புதின் வரவேற்றார். மாஸ்கோவின் ஒடின்ஷ்டோஸ்கை மாவட்டத்தில் உள்ள ரஷிய அதிபரின் பண்ணை வீடான நோவோ கிரையோவாவில் பிரதமர் மோடியை புதின் வரவேற்றார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபின் இந்திய பிரதமர் மோடி ரஷியா செல்வது இதுவே முதல் முறையாகும். அதேபோல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் மோடி ரஷியா செல்வது இதுவே முதல் முறையாகும்.

பண்ணை வீட்டில் பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் வரவேற்பு அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். மேலும், உக்ரைன் போர் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்கள் ரஷிய படையில் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story