காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 34 பேர் உயிரிழப்பு


காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 34 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Sep 2024 7:01 AM GMT (Updated: 12 Sep 2024 7:44 AM GMT)

காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐ.நா. தலைவர் தெரிவித்துள்ளார்.

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசிராட்டில் உள்ள பள்ளிக்கூடமாக மாறிய தங்குமிடத்தின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு ஐ.நா. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சுமார் 12,000 பேர் தங்குமிடமாக மாறிய பள்ளிக்கூடத்தின் மீண்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் நமது ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story