அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன்


Biden allows Ukraine to use US arms
x
தினத்தந்தி 31 May 2024 10:29 AM GMT (Updated: 31 May 2024 10:30 AM GMT)

உக்ரைன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பதையே இப்போதைய முடிவு காட்டுகிறது.

நியூயார்க்:

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, உக்ரைனின் உள்கட்டமைப்புகளை பெருமளவில் அழித்துள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால் 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க ஆயுதங்கள் மூலம் ரஷிய இலக்குகளை தாக்கலாம் என உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. ரஷிய பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தளர்த்தியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கார்கிவ் பகுதியில் ரஷியா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில், அந்த பிராந்தியத்தின் எல்லையில் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்க மறுத்த பைடன் தனது கொள்கையை மாற்றியிருப்பதையே இப்போதைய முடிவு காட்டுகிறது. அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும், தங்கள் ஆயுதங்களை ரஷியாவிற்குள் உள்ள ராணுவ இலக்குகள் மீது பயன்படுத்த உக்ரைனை அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ளலாம் என ஜெர்மனியும் யோசனை கூறி உள்ளது.

கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள பல கிராமங்களை கடந்த 10-ம் தேதி முதல் ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இந்த பிராந்தியத்தின் எல்லையில் உள்ள ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு உக்ரைனுக்கு அதிகாரம் அளிக்கப்படும், இதனால், அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முடிவினால் ரஷிய அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.


Next Story