'கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம்' - சீனா அறிவிப்பு


கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் - சீனா அறிவிப்பு
x

கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்,

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்களுக்கிடையே கடும் மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு(LAC) பகுதிகளில் இரு நாட்டு ராணுவங்களும் படை வீரர்களை குவிக்கத் தொடங்கின. இதனால் சுமார் நான்கு ஆண்டுகளாக கிழக்கு லடாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூழலில், கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்கும் வகையில் சீனாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா நேற்று அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தை தற்போது சீனாவும் உறுதி செய்துள்ளது. இதன்படி, கிழக்கு லடாக்கில் மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "எல்லை விவகாரங்கள் குறித்து சமீப காலமாக சீனா மற்றும் இந்தியா இடையே தூதரக ரீதியாகவும், ராணுவ வழிகள் மூலமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை அமல்படுத்துவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா செயலாற்றும்" என்று தெரிவித்தார்.


Next Story