தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை,
கோடை காலத்தில் மே மாதம் கத்தரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் 28 நாட்கள் வாட்டி வதைக்கும். அந்த நாட்களில்தான் வெயிலின் உக்கிரத்தை பல இடங்களில் உணர முடியும்.
அந்தவகையில் இந்த ஆண்டும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் கோடை மழையும் இருக்கும் என்பதுதான் வானிலை ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்தே வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இம்மாத தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தபடியே காணப்பட்டது. இப்போதே இப்படி என்றால், மே மாதத்தில் நம்முடைய நிலைமை என்ன? என பேசும் அளவுக்கு வெயில் வாட்டியது. இதற்கு சற்று இடைவெளியை கொடுக்கும் வகையில், ஆங்காங்கே கோடை மழையும் கைக்கொடுத்தது.
இந்த மழை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை ஒரு வாரத்துக்கு அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிலும் மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இந்த வெப்பத்தின் தாக்கத்தை அதிகமாக உணர முடியும்.
இதுமட்டுமல்லாமல், இந்த நாட்களில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது திருப்பத்தூர், ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, வேலூர் உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் பதிவாகக்கூடும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.