சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் - கலெக்டர் அறிவிப்பு


சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் - கலெக்டர் அறிவிப்பு
x

கோப்புப்படம்


ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை - தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவில்லை. இதையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதை அடுத்து நாளை (அக்டோபர் 17) சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story