எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் 350 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்று உறுதிமொழி ஏற்றனர்.
பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை இணைச் செயலாளர் சு. கோபிநாத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கல்லூரித் தாளாளர் ப. வெங்கடேஷ் ராஜா வாழ்த்துரை வழங்கினார். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகப்படுத்தினார்.
விழாவில் டாக்டர் இறையன்பு பேசுகையில், "பட்டங்கள் பல பெறினும் முதல் பட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்வில் மேன்மையுற அனைவரும் தம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். சமூக அறிவுடன் கூடிய தலைமைப் பண்பைப் பெற முயல வேண்டும். நுண்ணறிவைப் பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும். அறிவைப் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அது மேன்மையுறும். மேலும் இளைஞர்கள் உணர்ச்சி மேலாண்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று ஆலோசனை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 350 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்று, உறுதிமொழி ஏற்றனர். தமிழ்த்துறைத் தலைவர் மா. விஜயகுமார் நன்றியுரை வழங்கினார்.