இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் - சீமான்


இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும் - சீமான்
x

கோப்புப்படம்

காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசுப்பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசுப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கு, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமென்று கடந்த 2012-ம் ஆண்டு முந்தைய அ.தி.மு.க. அரசு அறிவித்து அதன்படி பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும் தமிழ்நாடு அரசு இதுவரை பணிநியமனம் செய்ய மறுத்து ஏமாற்றி வருவதால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தங்களின் முந்தைய பணியையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்த ஆசிரியப் பெருமக்கள் மீளா இருளில் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் அ.தி.மு.க. அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் மற்றுமொரு நியமனப் போட்டித் தேர்வுமூலம் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு முறையில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் அவ்வரசாணையை நான் அப்போதே வன்மையாகக் கண்டித்துத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்தியதோடு, ஆசிரியர்கள் நடத்திய தொடர்ப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்டும் ஆதரவு தெரிவித்தேன்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மறுநியமனத் தேர்வு முறையை ரத்து செய்வோம், தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பணியாணை வழங்குவோம் என்று வாக்குறுதியளித்து ஆசிரியப்பெருமக்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் முழுமையான ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்த தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், அதனை நிறைவேற்ற மறுத்ததோடு, ஆசிரியர் நியமனத் தேர்வினை கட்டாயம் என அறிவித்து வாக்களித்த ஆசிரியர் பெருமக்களுக்குப் பச்சைத் துரோகம் புரிந்தது.

வேறுவழியின்றி, ஏற்கனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 25,000 ஆசிரியர் பெருமக்கள், அரசு அறிவித்த மறு நியமனத்தேர்வினையும் தற்போது எழுதியுள்ள நிலையில், அந்த தேர்வின் விடைக்குறிப்புகளைக்கூட வெளியிடாமல் தி.மு.க. அரசு கால தாமதம் செய்வதால் நியமனத்தேர்வெழுதி காத்திருக்கும் ஆசிரியர் பெருமக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். விடைக்குறிப்புகளை வெளியிடவே இத்தனை மாதங்கள் காலதாமதம் எனில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது எப்போது?

கடந்த 2013-ம் ஆண்டு 25-35 வயதுகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி வழங்கப்படாததால், தேர்வர்களில் பலரும் தற்போது 35-45 வயது நிறைந்தவர்களாகிவிட்டனர். இருப்பினும் மீதமுள்ள பணிக்காலத்திற்காவது அரசுப்பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலேயே தற்போது அவர்கள் மறு நியமனத்தேர்வினையும் எழுதிக் காத்திருக்கின்றனர். ஆனால், தேர்வின் விடைக்குறிப்புகளைக் கூட வெளியிடாமல் காலதாமதம் செய்வது, பணி நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

அரசுப்பள்ளிகளில் தற்போது 10,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 3,190 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தற்போது நிரப்பப்பட உள்ளனர். மேலும், ஏறத்தாழ 6,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், வெறும் 2,700 பணியிடங்கள் மட்டுமே நியமனத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என தி.மு.க. அரசு அறிவித்திருப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும். அரசுப்பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளதால், மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்படும் கொடுஞ்சூழலும் நிலவுகிறது.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, அதனை அடிப்படையாகக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் காலியாகவுள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story