த.வெ.க. மாநாடு: உங்கள் வருகைக்காக இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் - விஜய்


த.வெ.க. மாநாடு: உங்கள் வருகைக்காக இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன் - விஜய்
x

கோப்புப்படம் 

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி காத்திருப்பேன் என்று விஜய் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம் மற்றும் நம் மனம், கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள், மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story