கனமழை எதிரொலி; 4 மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை


கனமழை எதிரொலி; 4 மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 16 Oct 2024 1:31 AM GMT (Updated: 16 Oct 2024 6:00 AM GMT)

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னைக்கு ரெட் அலர்ட்(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"இன்று (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரெயில், எம்.ஆர்.டி.எஸ், ரெயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். இன்று(அக்.16) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story