கனமழை எதிரொலி: கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடல்


கனமழை எதிரொலி: கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடல்
x

கனமழை எதிரொலியாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கதீட்ரல் சாலையில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் உலக தரத்துடன் நவீன அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இதில் மக்களை கவரும் வகையில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், இசை நீரூற்று, 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன் ரோப் கார், கலைக்கூடம், கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவையகம், பசுமை குகை, மர வீடு, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை அறிவிப்பு எதிரொலியாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் அக். 18-ம் தேதி வரை மூடப்படுவதாக தோட்டக்கலைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story