ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது


ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2024 10:24 AM GMT (Updated: 16 Oct 2024 1:16 PM GMT)

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெரியமோட்டூர், பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சுப்பிரமணி என்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடன் 7 பெண்கள் உள்பட11 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று ஆசிரியை ஒருவரை தலைமை ஆசிரியர் சுப்பிரமணி அழைத்து, துறை ரீதியான பணியை வழங்கி விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் என கூறி உள்ளார். அதன்படி அந்த ஆசிரியை பணியை முடித்துள்ளார். பின்னர் தலைமை ஆசிரியர், தனது அறைக்கு அந்த ஆசிரியையை வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டபடி அவசரம் அவசரமாக அங்கிருந்து வெளியேறி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அசோக்குமார், பாதிக்கப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார். அதன் பிறகு தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story