டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - முத்தரசன்


டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - முத்தரசன்
x

கோப்புப்படம் 

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு பேசி தீர்வு காண வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து சில்லறை மதுபான வியாபாரத்தை, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நேரடியாக மேற்கொண்டு வருகிறது. இதன் சில்லறை மதுபானப்பிரிவுப் பணியாளர்கள், கடந்த 22 ஆண்டுகளாகப் பணிபுரிந்தும் அவர்களுக்கு பணி நிரந்தரமோ, பணிக்குரிய ஊதியமோ, சமூக பாதுகாப்போ எதுவும் இல்லை.

மிகக் குறைந்த தொகுப்பூதியத்தை அவர்களுக்கு வழங்கும் அதே வேளையில், கடைகளில் நிர்வாக பராமரிப்பு செலவுகள் அனைத்தும் அவர்கள் தலை மீது சுமத்தப்படுகிறது. சமூக விரோதிகள் கடைகளை உடைத்து விற்பனை தொகையை திருடுவதும், பணத்துக்காக பணியாளர்களை கொலை செய்வதும் நடக்கிறது.

பணியாளர்களை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகள், அவர்களை சுரண்டி ஒழுங்கீனங்கள் அதிகரிக்க காரணமாகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படும் சூழலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோரிக்கைகளாக அரசுக்கு சமர்ப்பித்தும் அவை கண்டு கொள்ளப்படவில்லை.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படியான உரிமையை கூட அவர்கள் பெறமுடியாதபடி அரசு தடுத்து வருகிறது.

எனவே அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட், தொழிற்சங்க இயக்கத்தின் பிதாமகன், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 79-வது நினைவு தினமான 11.02.2025-ல், தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) உள்ளிட்ட பணியாளர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அறிவித்துள்ளன.

பிப்ரவரி 11-ல் காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி புறப்படும், பணியாளர்கள் ஊர்வலத்தை தமிழ்நாடு ஏஐடியூசியின் துணைத்தலைவர் முத்தரசன் (மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) தொடக்கி வைக்கிறார்.

டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை மேலும் தள்ளிப் போடாமல் தமிழ்நாடு அரசு நேரடியாக தலையிட்டு பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துவதுடன், பணியாளர் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சி அமைப்புகள் டாஸ்மாக் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி, போராட்டம் வெற்றிகரமாக அமைய அனைத்து ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story