காட்டெருமை முட்டியதில் காயமடைந்த வனக்காப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காட்டெருமை முட்டியதில் காயமடைந்த வனக்காப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் தடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45). இவர் கோவை வனக்கோட்டத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். அசோக்குமார் கடந்த 10-ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை அசோக்குமாரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அந்த பகுதியினர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சீலியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.