தேர்வில் தோல்வி: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலில் சில பாடங்களில் மாணவி தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு சரவணா நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை முருகன், தீபா மற்றும் அவர்களுடைய மகன் வேலைக்கு சென்றநிலையில், மாலையில் வீட்டுக்கு வந்த பெற்றோருக்கு மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாணவிக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இதில் மாணவி சில பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.