ஈரோடு: யானை மிதித்து கணவர் பலி- துக்கத்தில் மனைவியும் சாவு


ஈரோடு: யானை மிதித்து கணவர் பலி- துக்கத்தில் மனைவியும் சாவு
x
தினத்தந்தி 19 Nov 2024 7:58 PM (Updated: 20 Nov 2024 7:11 AM)
t-max-icont-min-icon

கணவர் இறந்ததால், அவருடைய மனைவி சன்மாதி துக்கம் தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் அணைக்கரை பைரமரத்தொட்டி பகுதியை சேர்ந்தவர் மாறன் (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி சன்மாதி (45). இவர்களது தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதனால் மாறன் கடந்த 16-ந் தேதி இரவு தோட்டத்தில் காவலுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டு யானை மாறனை மிதித்து கொன்றது.

இந்தநிலையில் மாறன் இறந்த செய்தி கேட்டதில் இருந்து அவருடைய மனைவி சன்மாதி துக்கம் தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். பிரேத பரிசோதனைக்குப்பின் வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட உடலை பார்த்து அலறி துடித்து கண்ணீர் விட்டார். இதையடுத்து உறவினர்கள் உடலை புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த சன்மாதி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரடைப்பால் சன்மாதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Next Story