தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்; தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Live Updates
- 22 March 2025 5:21 AM
கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. தொகுதி மறுசீரமைப்பை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம். இது எண்ணிக்கை பற்றியதல்ல, அதிகாரத்தை பற்றியது என்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- 22 March 2025 5:01 AM
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 22 March 2025 4:01 AM
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ள மாநில பிரதிநிதிகள் தொடர்பான விவரம்:-
- 22 March 2025 3:32 AM
கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்கும் மாநில பிரதிநிதிகளுக்கு பரிசுப் பெட்டகம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு அரசின் சார்பில் பரிசுப் பெட்டகம் வழங்கப்படவுள்ளது.
பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட உள்ளன
- 22 March 2025 3:13 AM
கூட்டுக்குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம்
தொகுதி மறுசீரமைப்பு எதிராக நடைபெறும் கூட்டுக்குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பெயர்கள் அவரவர் தாய்மொழியில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- 22 March 2025 3:09 AM
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சென்னை வந்துள்ளார்.
டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுக்கொண்டுக்க மாட்டோம்’ என்றார்.
- 22 March 2025 12:58 AM
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழகம் போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது.
எனவே, இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், அவரது தலைமையில் கடந்த 5-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவகுமார், முன்னாள் முதல்-மந்திரிகள் ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), நவீன் பட்நாயக் (ஒடிசா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் மார்ச் 22-ந்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும், அதில் பங்கேற்க வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்.
இந்தக் கூட்டத்தில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், எம்.பி.க்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.