திமுக கூட்டணி வலுவாக உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


திமுக கூட்டணி வலுவாக உள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Oct 2024 2:28 PM IST (Updated: 28 Oct 2024 2:41 PM IST)
t-max-icont-min-icon

திமுக தொகுதி பார்வையாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதுதவிர, திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்குவது, அதற்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, சமூக வலைத்தளத்தை கண்காணிப்பது மற்றும் அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளைச் சிறப்பாக செய்து முடியுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும். சட்டசபை தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டதால் தேர்தலில் சீட் கிடைக்காது என்று கவலைப்பட வேண்டாம்; அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

சட்டசபை தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்; அந்த வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று கூறினார்.


Next Story