தி.மு.க. கூட்டணியில் விவாதம் இருக்கலாம், விரிசல் ஏற்படாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தி.மு.க. கூட்டணியில் விவாதம் இருக்கலாம், விரிசல் ஏற்படாது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

தி.மு.க. கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலய அரங்கில் நடைபெறும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்லத் திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கு பெற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுவதுதான் தி.மு.க.வின் நோக்கம். தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி ஜோசியராக மாறிவிட்டார். தன் கட்சியை வளர்க்க முடியாத அவர் அடுத்த கட்சியின் கூட்டணி உடையாதா என காத்திருக்கிறார். தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது என்ற விரக்தியிலும், தி.மு.க.வின் செல்வாக்கு உயர்கிறதே என்ற ஆதங்கத்திலும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

பக்கத்து வீட்டில் என்ன தகராறு என காத்திருப்பார்களே அதுபோல எடப்பாடி பழனிசாமி காத்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதால் பொறாமையில் பேசி வருகிறார். தி.மு.க. கூட்டணியில் விவாதங்கள் இருக்கலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. எங்கள் கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி இல்லை; கொள்கைக்காக அமைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story